Monday, 2 July 2018

விஷ நரி தெரஸா

".....1984ல் இந்தியாவையே உலுக்கி, 2,500க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட போபால் விஷவாயுக் கசிவின் போது, அங்கு நேரடியாகச் சென்ற மதர் தெரசா அந்தப் பேரழிவை ‘விபத்து’ என்று வர்ணித்தார். பாவத்தின் சுமையே விபத்திற்குக் காரணம் என்றார். அந்தப் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனம் குறித்து ஒரு சிறு கண்டனத்தைக்கூட வெளிப்படுத்தாதது மட்டுமல்ல, அதன் தலைவரான ராபின் ஆண்டர்சனைத் தப்பிக்க வைக்கும் திரைமறைவு வேலைகளுக்கு ஊக்கம் தரும் வகையில், ‘இந்திய மக்கள் அவரை மன்னிக்க வேண்டும்’ என்று உபதேசித்தார். ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிடி’ நிறுவனத்திற்கு நன்கொடைகளாகக் குவிந்திருந்த பல மில்லியன் டாலர் நிதியிலிருந்து ஒரு காசு கூட இந்தப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கான நிவாரணத்திற்காக மதர் தெரசா அளிக்கவில்லை. இந்தத் துயரம் எந்த அளவிற்கு உங்களைப் பாதித்துள்ளது என்று கேட்கப்பட்டபோது, “விபத்து இங்கு நடந்துள்ளதால் உங்கள் மனம் மிகவும் துயரப்படுகிறது. உலகெங்கும் நடக்கும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகளில் ஏற்படும் உயிரிழப்புகளை எண்ணிப் பாருங்கள்” என்று பதிலளித்தார் மதர் தெரசா[3].

அந்த மாபெரும் மானுட சோகத் தருணத்திலும் மனித நேயத்தைவிட ‘கருக்கலைப்பு பாவம்’ என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதமே மதர் தெரசாவின் மனதில் கோலோச்சியது.."

"...உலக அளவில் மதர் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள். இந்த வசூல் பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசா பெயரிலான அமைப்புகள் எதுவும் இந்த அளவுக்குப் பெரும் நிதியைச் செலவழித்தப் பெரிதாக எதையும் செய்வதாகத் தெரியவில்லை. சிஸ்டர்கள் நடத்தும் இந்த அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை - முக்கியமற்றவை - எல்லா நாடுகளிலும், உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.
சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது. இந்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.
மதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991ல் அவரது அமைப்புக்கு வந்த வரவில் 7% மட்டுமே செலவழிக்கப் பட்டது. மீதமுள்ள பணம் எங்கே போனது? அதில் ஒரு பகுதியைப் பிற நாடுகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல் செய்த விவரங்கள் சொல்கின்றன. எந்த மேல்விவரமும் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம் - அங்குள்ள வாட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அந்தப் பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.
சரி. இவ்வளவு குறைபாடுகளும் மோசடிகளும் இருந்தபோதும் கூட, அவர் எந்தப் பிரதிபலனும் கருதாது இந்திய சமூகத்திற்குச் சேவை செய்தாரில்லையா என்று வெள்ளந்தியாகக் கேட்டு உணர்ச்சி வசப்படும் பாமரர்கள் நிறைந்த நாடு இது. ஆனால், மதர் தெரசா தனது வாய்மொழியிலேயே அதை மறுத்திருக்கிறார். “பெருவாரியான மக்கள் சமூக சேவகர் என்று என்னைக் குறித்து எண்ணிக் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகர் அல்ல. நான் ஏசுவுக்காக ஊழியம் செய்பவள். கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்புவதும் மக்களை அதன்பால் திருப்புவதுமே எனது மையமான பணி....”

*மதர் தெரசா வின் நிஜமுகம் மதமாற்றத்திற்கு ஆதரவானது. இந்திய மக்களின் மனதில் கிறிஸ்தவ மதம் பற்றிய கருத்தை உயர்த்த, கட்டமைக்க திட்டமிட்டு உருவாக்கப் பட்ட மிஷநரி பிம்பம் தான் மதர்தெரசா....*

No comments:

Post a Comment